Tuesday, January 6, 2015

உறவின் திசைகள்!

இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார்.

பெண்: "தம்பி ஆஸ்பத்திரி போகணும்"
ஓட்டுனர்: "நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".

பெண்: "என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா"
ஓட்டுனர்: "நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்"

அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, கார் அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

கார் ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது.

இரண்டு ரெயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது. இப்போது கார் இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது.

நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த கார் இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் மருத்துவர் வந்து சுகப்பிரசவம் நடந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார்.

பெண்: "தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்"
ஓட்டுனர்: "வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார். பணத்தை நீங்களே வைங்க"

ஏதோ யோசிக்க, போனை எடுத்த அந்த ஓட்டுனர், ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பண்ணினான்.

"ஹலோ முதியோர் இல்லமா?"
"ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?"

"மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன்.. இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக"

முதியோர் இல்ல பொறுப்பாளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பண்ணி விட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தார் .

ஆம்! நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது.
(படித்ததில் பிடித்து பகிர நினைத்தது)

Tuesday, December 30, 2014

நீங்களே சொல்லுங்க! என் பதில் சரியா? இல்லையா??

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்.. முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்? அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..!

சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்.. வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..! 

கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!

கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான.. பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்.. வாழை மரங்கள் எதற்காக கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!

கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!

கேள்வி;- இரவு- பகல்.. எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்.. மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்.. உதிப்பதாலும் இரவு- பகல் ஏற்படுகிறது..!

கேள்வி;- மகாத்மா காந்தி.. எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!

கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில்;- இல்லை.. திருமணங்கள் செய்யும் அவரவர் வீட்டில்..!

கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார் கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக.. கொத்தனார்களால் கட்டப்பட்டது..!

கேள்வி;- 8மாம்பழங்களை.. 6 பேருக்கு எப்படி சரியாக பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!

இப்போ சொல்லுங்க! பதில் சரியா? இல்லையா??

Thursday, December 4, 2014

திட்டமிட்ட வாழ்கை இனிக்கும்???

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,
5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார். அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.

அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.
1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம இறுந்துடுவாங்க.


ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.

அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில் விட்டுடுங்கன்னு சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு.

அதற்கு ராஜா நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.

இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன்.
இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.

இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.
-
திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்!!
(நெட்டில் சுட்டது!!!)

Thursday, November 6, 2014

வங்காரி மாத்தாய்!

ஒரு நாள் ஒரு அடர்ந்தக் காட்டில் காட்டுத் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க யானை, சிங்கம், புலி போன்ற பெரிய மிருகங்கள் செய்வதறியாது தவித்தன.

அவ்வமயம் ஒரு சின்னஞ் சிறு சிட்டுக்குருவி மட்டும் எவ்வளவு வேகமாக பறக்க முடியுமோ அவ்வளவு வேகமாக பறந்து தனது சின்னஞ் சிறு அலகால் தண்ணீரை அள்ளி வந்து தெளித்தது.

இதைக் கண்ட பெரிய விலங்குகள் "நீயோ சின்னஞ் சிறு குருவி. உன்னால் என்ன செய்து விட முடியும்?" என்று கேட்டன!

அதற்கு அந்த குருவி "என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நாம் அனைவரும் இதைத்தான் செய்ய வேண்டும்!!" என்றது.

இந்த கதையைச் சொன்னவர் வங்காரி மாத்தாய்(Wangari Maathai).

அவர் மேலும் "நானும் அந்தச் சிட்டுக் குருவி போல இந்த பூமி அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாக செய்வேன்.” என்றார்.

அவர் என்ன செய்தார் தெரியுமா?
கிரீன் பெல்ட் மூவ்மென்ட் (Green Belt Movement) என்ற இயக்கத்தை துவங்கி அதன் வாயிலாக கிட்டத்தட்ட 14 கோடிக்கும் மேலான மரக்கன்றுகளை நட்டு பசுமரக் குடைகளை உருவாக்கியுள்ளார். அதற்காக 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றுள்ளார்.

"வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்."

Thursday, October 23, 2014

வலியை வழியனுப்பு...

வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியர் மேசைமீதிருந்த கண்ணாடி குடுவையை எடுத்து உயர்த்திக் காட்டி “இது எவ்வளவு எடை இருக்கும்?” என்று கேட்டார்.

அதற்க்கு "100 கிராம், 50 கிராம்" என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

உடனே ஆசிரியர் மாணவர்களை பார்த்து “இதன் சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனால் எனது கேள்வி அதுவல்ல”;  “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” என்று கேட்டார்.

மாணவன்: “ஒண்ணுமே ஆகாது சார்”

ஆசிரியர்: "மிகச்சரியான பதில்! ஆனால் ஒரு மணி நேரம் இப்படியே வைத்துக்கொண்டிருந்தால்…?”

மாணவன்: “உங்க கை வலிக்கும் சார்”

ஆசிரியர்: “ஒருநாள் முழுவதும் இப்படியே வைத்துக்கொண்டிருந்தால்…?”

மாணவன்: “உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

ஆசிரியர்: “மிக மிக சரியான பதில்! ஒரு மணி நேரத்துலே என் கை வலி ஏற்படுவதற்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுவதற்கும் இந்த குடுவையின் எடை கூடிக்கொண்டே போகுமா என்ன?”

மாணவன்: “இல்லை சார். அது வந்து…?!?”

ஆசிரியர்: “எனக்கு கை வலிக்காமல், மரத்துவிடாமல் இருக்கவேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?”

மாணவன்: “குடுவையை உடனே கீழே வெச்சுடணும் சார்”

ஆசிரியர்: "மிக நேர்த்தியான பதில். பிரச்சினை இந்த குடுவைதான்"

ஒரு பிரச்சினை நமக்கு வந்தால் அதை அப்படியே மண்டைக்குல் ஒரு மணி நேரம் போட்டு வைத்தால் வலிக்க ஆரம்பிக்கும்.

ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருந்தாள் மூளை செயலிழந்து மரத்துபோயவிடும்..

அதனால்
உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு உங்கள் வேலையை தொடருங்கள். அந்த பிரச்சனை தன்னால் தீரும்.

Monday, September 22, 2014

என்னுடைய மகிழ்ச்சி எங்கே????

ஒரு பெரிய ஹாலில் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் உள்ள குடுவையில் போடச் சொன்னார். அதன்பின் அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள்ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டும்  தள்ளிக்கொண்டும் கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 

5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், 

'ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்' என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.


இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், 'இது தான் வாழ்க்கை! எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை!!'


"நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது." 


அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,
உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்!!!